விவசாயமும் வீகன் டயட்டும்

இந்தியாவின் 70% மக்கள் இன்னும் விவசாயம் தான் பார்த்து வருகிறார்கள் என்றும், இந்தியா இன்னமும் ஒரு விவசாய நாடுதான் என்றும் ஒரு பத்திரிகையில் படித்தேன். ஆனாலும், இங்கே உணவுத்தட்டுப்பாடும், விலையேற்றமும், ஏன் என இது சிந்திக்க வைக்கிறது. விஷயம் இதுதான், விவசாயம் என்பதில், விவசாயத்திற்கு முற்றிலும் முரணான கால்நடை, மீன் மற்றும் இறைச்சியையும் சேர்க்கிறார்கள் மடையர்கள். பயிர் விவசாயம் மட்டுமே விவசாயம், கால்நடை, இறைச்சி, பால் தோல் எல்லாம் விவசாயத்தில் சேராது, அவை தொழிற்சாலைகள் தான். ஒரு இரசாயனத் தொழிற்சாலைக்கு சற்றும் சளைக்காமல் கால்நடைப் பண்ணைகளூம் , இறைச்சித்க் கூடங்களும், தோல் பட்டறைகளும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தவும், இயற்கை வளங்களை அழிக்கவும் செய்யும். விவசாயம் காடுகளை அழிக்கிறது உண்மைதான், ஆனால் மரங்கள் இருக்கும் இடத்தில் பயிர்கள் இருப்பதற்கும், இறைச்சியும், பிணங்களும், இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 1000 லிட்டர் தண்ணீரைப் பாய்ச்சி, 100 கிலோ தானியம் எடுப்பதற்கும், 1000 லிட்டர் தண்ணீர் பாய்ச்சி, 100 கிலோ தானியமும் அளித்து, பல ஏக்கரில் நிலத்தையும் ஆக்கிரமித்து, 100 கிலோ இறைச்சி தயாரிப்பதற்குமான வித்தியாசம் இதில் இருக்கிறது. (கணக்கு தோராயமானது தான், முழுமையான புள்ளிவிவரம் இருந்தால் தெரிவிக்கவும். மற்றபடி பயிர் விவசாயத்தை விட, இறைச்சி தயாரிப்புக்கு எவ்வளவு மறைநீர்  தேவை என்பது அனைவரும் அறிந்ததே).

எனவே விவசாயம் போற்றுவோம், கால்நடை, இறைச்சி, தோல் தொழிற்சாலைகளை புறக்கணிப்போம். நம் நாட்டு விவசாய பலத்தைக் கண்டு பொறாமைப் பட்ட ஆங்கிலேயர்கள், அதைக் குலைக்கவும், அவர்கள் நாட்டு செயற்கை உரங்களை விற்பனை செய்து பணம் ஈட்டவும் விதைக்கப்பட்ட சதி தான் இறைச்சிக்கூடங்களும், தோல் பட்டறைகளும்.
உணவு முறை என்று எடுத்துக்கொண்டால் பல்வேறு வகையான உணவுமுறைகள் பின்பற்றப் படுகிறது. சைவம், அசைவம், முட்டை+சைவம், மீன்+சைவம், பால்+சைவம், தற்போது பேலியோ அல்லது கேவ்மென், வீகன் என அவை பலவிதம். வீகன் உணவுமுறை தவிர்த்து மீதமுள்ள அனைத்து உணவு முறைகளுமே வெறும் உணவு முறையாக மட்டுமே இருக்கின்றன. வீகன் டயட், டயட் என்பதோடு நில்லாமல் வாழ்வியல் நெறிமுறையாகவும் இருக்கிறது. கொல்லாமைக்கு முற்றிலும் ஒத்து வருகிற உணவுமுறை வீகன் டயட் மட்டும் தான். பரிணாம வளர்ச்சியின் முதிர்ச்சி நிலையாக வீகன் டயட்டை எடுத்துக் கொள்ளலாம். அடிமைத்தனம், பெண்ணடிமைத்தனம், நிற வேற்றுமை, இனப் பாகுபாடு, படுகொலை போன்றவற்றை எதிர்த்து, அவற்றை கிட்ட தட்ட சமுதாயத்திலிருந்து நீக்கவும் செய்திருக்கிறோம். அது போலவே, நமக்கு முன் இப்பூமியில் தோன்றி நம்முடனே வாழ்ந்து வரும் வாயில்லா ஜீவராசிகளை கொல்வதும் புசிப்பதும் அடிமைப்படுத்துவதும் தான் நம் உணவுமுறை என்றால் பரிணாம வளர்ச்சி எதற்கு? பேலியோலித்திக் காலம்(10000 வருடங்களுக்கு முன், விவசாயம், கால்நடை ஆகியவை வருவதற்கு முன்) மனிதன் எதை சாப்பிட்டிருப்பான், எதை சாப்பிட்டிருக்க மாட்டான் என்பதை ஆராய்ந்து உண்பதை விட, இப்போது நமக்கு என்ன தேவை, என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்பது சாமர்த்தியம் அன்றோ? ஆதிவாசி போல் உண்பது, வேற்று கிரகவாசி போல உண்பது என்பதெல்லாம் சுயநலமும், சொந்த சௌகர்யத்தையும் மட்டுமே அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஆனால் இயன்றவரையிலும் மனிதத்தை கடைபிடிப்பதும், கொல்லாமல் புசிப்பதும் என சுயநலம் இல்லாத, அனைத்து ஜீவராசிகளையும் அன்பெனும் வட்டத்தில் இணைத்து சிந்திக்கும் கோட்பாட்டுடன் வீகன் டயட் தனித்து மிளிர்கிறது. 5 ஆண்டுகால வீகன் டயட்டில் இருக்கிறேன். எந்த சத்தும் குறைவாக இல்லை, இசை, பொறியியல், பிராணிகள் நல நடவடிக்கைகள் என சுறுசுறுப்பாகவே இருக்கிறேன். மிதமான உடற்பயிற்சி, இயற்கையான உணவு என ஆரோக்கியம் ஜோராகவே இருக்கிறது. வேறென்ன வேண்டும்? ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொன்ன கதையாய், மாமிச உணவு மேலும் மேலும் மாமிசத்தையே சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளும். ஆரம்ப கட்டத்திலேயே, குழந்தைப் பருவத்திலேயே இயற்கை உணவை பழகிவிடுவது நலம், நமக்கும் நம்மை சுற்றியிருக்கும் உலகிற்கும்.

சிலர் சொல்கிறார்கள், புல்லுணவு உண்ட மிருகங்களின் மாமிசம், மிருகங்களின் உள்ளுறுப்புகள், வால், நாக்கு போன்றவை அந்த சத்து நிரம்பியது, இந்த சத்து நிரம்பியது, அது மட்டுமே முழு ஆரோக்கிய உணவாகும், அதை உண்பது நன்மை என்று. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. சாத்தியப்பட்டாலும் அது மேலும் வீரியமான முறையில் இயற்கை வளங்களையும் ஆற்றலையும் அழிப்பதாகத் தான் இருக்கும். நன்னெறிகளும் அதில் இருக்காது. என்னவென்றால், ஒரு மிருகத்தின் பெரும்பகுதி சதை மற்றும் இறைச்சிதான். அதை உண்பதற்கே இங்கே பெரும்போட்டி. 20 கிலோ எடையுள்ள ஆட்டின் பெரும்பகுதி சதையே போதுமானதாக இல்லை, எனவே மேலும் பல ஆடுகளை பெருகச் செய்து, கொன்று தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஆட்டுக்கு இருப்பதோ ஒரு நாக்கு, ஒரு வால், இரண்டு கிட்னி, ஒரு ஈரல் என்பன. ஆட்டின் நாக்கும், கிட்னியும் அருமையான சத்து வாய்ந்தது என்றே வைத்துக்கொள்வோம்(ஆனால் அது தேவைக்கு அதிகமாகத்தான் இருக்கும். அளவான சத்து தாவர உணவிலேயே கிடைத்து விடும்) ஒரு நூறு பேருக்கு ஆட்டு கிட்னி வேண்டுமென்றால் 50 ஆடுகள் வேண்டும், ஈரல் வேண்டும் என்றால் 100 ஆடுகள் வேண்டும், இதயம் வேண்டும் என்றால் 100 ஆடுகள் வேண்டும். ஆக, 100 ஆடுகளை வளர்த்து, கொழுக்கச் செய்து, 500 பேருக்கான தானியமும் வீண் செய்து, 1000 பேருக்கான தண்ணீரை வீணாக்கி, 100 பேருக்கு இதயமும் ஈரலும் கிடைக்க வேண்டும். இது தேவைதானா? சிந்திப்பது நலம். மாமிச உணவு எந்நாளும் பசுமையான உலகிற்கு ஏற்றதாகாது. ஆக மாமிசம் வேண்டுமென்றால் பசுமையான உலகையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அடமானம் வைக்க வேண்டியதுதான்.

நன்றி.