விவசாயமும் வீகன் டயட்டும்

இந்தியாவின் 70% மக்கள் இன்னும் விவசாயம் தான் பார்த்து வருகிறார்கள் என்றும், இந்தியா இன்னமும் ஒரு விவசாய நாடுதான் என்றும் ஒரு பத்திரிகையில் படித்தேன். ஆனாலும், இங்கே உணவுத்தட்டுப்பாடும், விலையேற்றமும், ஏன் என இது சிந்திக்க வைக்கிறது. விஷயம் இதுதான், விவசாயம் என்பதில், விவசாயத்திற்கு முற்றிலும் முரணான கால்நடை, மீன் மற்றும் இறைச்சியையும் சேர்க்கிறார்கள் மடையர்கள். பயிர் விவசாயம் மட்டுமே விவசாயம், கால்நடை, இறைச்சி, பால் தோல் எல்லாம் விவசாயத்தில் சேராது, அவை தொழிற்சாலைகள் தான். ஒரு இரசாயனத் தொழிற்சாலைக்கு சற்றும் சளைக்காமல் கால்நடைப் பண்ணைகளூம் , இறைச்சித்க் கூடங்களும், தோல் பட்டறைகளும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தவும், இயற்கை வளங்களை அழிக்கவும் செய்யும். விவசாயம் காடுகளை அழிக்கிறது உண்மைதான், ஆனால் மரங்கள் இருக்கும் இடத்தில் பயிர்கள் இருப்பதற்கும், இறைச்சியும், பிணங்களும், இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 1000 லிட்டர் தண்ணீரைப் பாய்ச்சி, 100 கிலோ தானியம் எடுப்பதற்கும், 1000 லிட்டர் தண்ணீர் பாய்ச்சி, 100 கிலோ தானியமும் அளித்து, பல ஏக்கரில் நிலத்தையும் ஆக்கிரமித்து, 100 கிலோ இறைச்சி தயாரிப்பதற்குமான வித்தியாசம் இதில் இருக்கிறது. (கணக்கு தோராயமானது தான், முழுமையான புள்ளிவிவரம் இருந்தால் தெரிவிக்கவும். மற்றபடி பயிர் விவசாயத்தை விட, இறைச்சி தயாரிப்புக்கு எவ்வளவு மறைநீர்  தேவை என்பது அனைவரும் அறிந்ததே).

எனவே விவசாயம் போற்றுவோம், கால்நடை, இறைச்சி, தோல் தொழிற்சாலைகளை புறக்கணிப்போம். நம் நாட்டு விவசாய பலத்தைக் கண்டு பொறாமைப் பட்ட ஆங்கிலேயர்கள், அதைக் குலைக்கவும், அவர்கள் நாட்டு செயற்கை உரங்களை விற்பனை செய்து பணம் ஈட்டவும் விதைக்கப்பட்ட சதி தான் இறைச்சிக்கூடங்களும், தோல் பட்டறைகளும்.
உணவு முறை என்று எடுத்துக்கொண்டால் பல்வேறு வகையான உணவுமுறைகள் பின்பற்றப் படுகிறது. சைவம், அசைவம், முட்டை+சைவம், மீன்+சைவம், பால்+சைவம், தற்போது பேலியோ அல்லது கேவ்மென், வீகன் என அவை பலவிதம். வீகன் உணவுமுறை தவிர்த்து மீதமுள்ள அனைத்து உணவு முறைகளுமே வெறும் உணவு முறையாக மட்டுமே இருக்கின்றன. வீகன் டயட், டயட் என்பதோடு நில்லாமல் வாழ்வியல் நெறிமுறையாகவும் இருக்கிறது. கொல்லாமைக்கு முற்றிலும் ஒத்து வருகிற உணவுமுறை வீகன் டயட் மட்டும் தான். பரிணாம வளர்ச்சியின் முதிர்ச்சி நிலையாக வீகன் டயட்டை எடுத்துக் கொள்ளலாம். அடிமைத்தனம், பெண்ணடிமைத்தனம், நிற வேற்றுமை, இனப் பாகுபாடு, படுகொலை போன்றவற்றை எதிர்த்து, அவற்றை கிட்ட தட்ட சமுதாயத்திலிருந்து நீக்கவும் செய்திருக்கிறோம். அது போலவே, நமக்கு முன் இப்பூமியில் தோன்றி நம்முடனே வாழ்ந்து வரும் வாயில்லா ஜீவராசிகளை கொல்வதும் புசிப்பதும் அடிமைப்படுத்துவதும் தான் நம் உணவுமுறை என்றால் பரிணாம வளர்ச்சி எதற்கு? பேலியோலித்திக் காலம்(10000 வருடங்களுக்கு முன், விவசாயம், கால்நடை ஆகியவை வருவதற்கு முன்) மனிதன் எதை சாப்பிட்டிருப்பான், எதை சாப்பிட்டிருக்க மாட்டான் என்பதை ஆராய்ந்து உண்பதை விட, இப்போது நமக்கு என்ன தேவை, என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்பது சாமர்த்தியம் அன்றோ? ஆதிவாசி போல் உண்பது, வேற்று கிரகவாசி போல உண்பது என்பதெல்லாம் சுயநலமும், சொந்த சௌகர்யத்தையும் மட்டுமே அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஆனால் இயன்றவரையிலும் மனிதத்தை கடைபிடிப்பதும், கொல்லாமல் புசிப்பதும் என சுயநலம் இல்லாத, அனைத்து ஜீவராசிகளையும் அன்பெனும் வட்டத்தில் இணைத்து சிந்திக்கும் கோட்பாட்டுடன் வீகன் டயட் தனித்து மிளிர்கிறது. 5 ஆண்டுகால வீகன் டயட்டில் இருக்கிறேன். எந்த சத்தும் குறைவாக இல்லை, இசை, பொறியியல், பிராணிகள் நல நடவடிக்கைகள் என சுறுசுறுப்பாகவே இருக்கிறேன். மிதமான உடற்பயிற்சி, இயற்கையான உணவு என ஆரோக்கியம் ஜோராகவே இருக்கிறது. வேறென்ன வேண்டும்? ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொன்ன கதையாய், மாமிச உணவு மேலும் மேலும் மாமிசத்தையே சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளும். ஆரம்ப கட்டத்திலேயே, குழந்தைப் பருவத்திலேயே இயற்கை உணவை பழகிவிடுவது நலம், நமக்கும் நம்மை சுற்றியிருக்கும் உலகிற்கும்.

சிலர் சொல்கிறார்கள், புல்லுணவு உண்ட மிருகங்களின் மாமிசம், மிருகங்களின் உள்ளுறுப்புகள், வால், நாக்கு போன்றவை அந்த சத்து நிரம்பியது, இந்த சத்து நிரம்பியது, அது மட்டுமே முழு ஆரோக்கிய உணவாகும், அதை உண்பது நன்மை என்று. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. சாத்தியப்பட்டாலும் அது மேலும் வீரியமான முறையில் இயற்கை வளங்களையும் ஆற்றலையும் அழிப்பதாகத் தான் இருக்கும். நன்னெறிகளும் அதில் இருக்காது. என்னவென்றால், ஒரு மிருகத்தின் பெரும்பகுதி சதை மற்றும் இறைச்சிதான். அதை உண்பதற்கே இங்கே பெரும்போட்டி. 20 கிலோ எடையுள்ள ஆட்டின் பெரும்பகுதி சதையே போதுமானதாக இல்லை, எனவே மேலும் பல ஆடுகளை பெருகச் செய்து, கொன்று தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஆட்டுக்கு இருப்பதோ ஒரு நாக்கு, ஒரு வால், இரண்டு கிட்னி, ஒரு ஈரல் என்பன. ஆட்டின் நாக்கும், கிட்னியும் அருமையான சத்து வாய்ந்தது என்றே வைத்துக்கொள்வோம்(ஆனால் அது தேவைக்கு அதிகமாகத்தான் இருக்கும். அளவான சத்து தாவர உணவிலேயே கிடைத்து விடும்) ஒரு நூறு பேருக்கு ஆட்டு கிட்னி வேண்டுமென்றால் 50 ஆடுகள் வேண்டும், ஈரல் வேண்டும் என்றால் 100 ஆடுகள் வேண்டும், இதயம் வேண்டும் என்றால் 100 ஆடுகள் வேண்டும். ஆக, 100 ஆடுகளை வளர்த்து, கொழுக்கச் செய்து, 500 பேருக்கான தானியமும் வீண் செய்து, 1000 பேருக்கான தண்ணீரை வீணாக்கி, 100 பேருக்கு இதயமும் ஈரலும் கிடைக்க வேண்டும். இது தேவைதானா? சிந்திப்பது நலம். மாமிச உணவு எந்நாளும் பசுமையான உலகிற்கு ஏற்றதாகாது. ஆக மாமிசம் வேண்டுமென்றால் பசுமையான உலகையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அடமானம் வைக்க வேண்டியதுதான்.

நன்றி.

ஒவ்வொரு உயிரும் சுதந்திரமாகும் வரை

குற்றமறியா ஜீவன்களான விலங்குகளை அடிமைப்படுத்துவதற்கும், கொல்வதற்கும், அடைத்து வைப்பதற்கும் நமது பங்களிப்பை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே சாத்தியமான வழி வீகனாக இருப்பதுதான். அதாவது, மிருகவதை மூலம் தயாரித்து கிடைக்கும் எந்த பொருட்களையும் வாங்காமல் இருப்பது. இதற்காக நாம் சுவையான உணவையோ நாகரிகமான உடையையோ தியாகம் செய்ய வேண்டியதில்லை. காபி, தேனீர் மற்றும் இனிப்பு பண்டங்கள், கேக் வகைகள் என எதையுமே இயற்கையான தாவர மூலப்பொருட்கள் மூலம் தயார் செய்ய முடியும். பால் என்பது பசுவிடம் இருந்து தான் வரவேண்டும் என்பதில்லை, சோயா, பாதாம், தேங்காய், அரிசி, நிலக்கடலை போன்றவற்றில் இருந்தும் பால் தயாரிக்கலாம். இவை நீங்கள் விரும்பும் எந்த உணவையும் வீகன் உணவாக மாற்றக் கூடியவை.
மேலும், கம்பளி, தோல், பட்டு, முத்து மற்றும் இதர பொருட்களுக்கு கூட இக்காலத்தில் நவீன மாற்றுப் பொருட்கள் கிடைக்கின்றன. ஷாம்பூ, சோப்பு, போன்ற அழகு சாதனப் பொருட்கள் கூட, மிருகங்களின் மேல் சோதனை செய்யப்படாத பல தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. மொத்தத்தில் வீகனாக இருப்பதால் எதையும் இழக்கத் தேவையில்லை, ஏக்கமும் இல்லை.

மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
https://indiaagainstspeciesism.wordpress.com/being-vegan/

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மனிதர்களின் உணவு தன்னிறைவிற்கும் ஒரு தீர்வு
எந்த ஒரு பொருளை தயாரிப்பதற்கும் இயற்கை வளங்களை உபயோகித்து தான் ஆக வேண்டும். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால். ஆம்,
விலங்குகளை இறைச்சிக்காகவும், பால், தோல் போன்ற பொருட்களுக்காகவும் அளவுக்கதிகமான எண்ணிக்கையில் செயற்கையாகப் பெருகச் செய்து வளர்ப்பது இயற்கை வளங்களை அதிவேகமாக அழிக்கிறது. காரணம் இதுதான், கோடிக்கணக்கில் பல்கிப் பெருகி இருக்கும் விலங்குகள் கொழு கொழுவென வளரவும், உயிர் வாழவும் பெரும் அளவு நீரும் உணவு தானியங்களும் நிலமும் வீணாக்கப் படுகின்றன. நினைவில் கொள்க, மாமிசம் காற்றில் இருந்து உடனுக்குடன் உருவாவதில்லை. மேலும் மிருகவதை தயாரிப்புகள், உலகில் உற்பத்தியாகும் 50%  தானியங்களின் விரயத்திற்கும், 18%  பசுமைக்குடில் வாயுக்கள் உருவாகவும், காடுகள் அழிவதற்கும் காரணமாக இருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை அளித்திருக்கிறது. பெரும் அளவிலான ஆற்றல் இவற்றிற்கு விரயமாவது மட்டும் அல்லாமல் ஆபத்தான வாயுக்கள்(மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு) மூலம் காற்றும் மாசு படுகிறது. பல்வேறு வகையான கழிவுகளினால் மண் மற்றும் நீர் வளம் அழிகிறது.
மேலும் அறிய அற்புதமான ஆதாரங்கள்

எர்த்லிங்க்ஸ்(EARTHLINGS) காணொளி-இணையத்தில் இலவசமாக காணலாம்.
http://www.vegansidekick.com/guide
http://tamilvegan.blogspot.com

ஒவ்வொரு உயிரும் சுதந்திரமாகும் வரை
 அடிமையாக வாழ்வதற்கும் கொல்லப்படுவதற்கும் மட்டுமே பிறவி எடுப்பதை கற்பனை செய்து பாருங்கள். அது தான் மாமிசத்திற்கும், பாலுக்கும், தோலுக்கும் இதர பொருட்களுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் வளர்க்கப்படும் எண்ணற்ற விலங்குகள், மற்றும் பறவைகளின் வாழ்வில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
அறிவிற்சிறந்த நாகரிக மனிதர்களாக இருக்கும் நாம் நிற வேற்றுமையோ, ஜாதி மத வேற்றுமையோ, பாலின வேற்றுமையோ சமூகத்தில் இருப்பதை விரும்புவதில்லை, அவற்றை பின்பற்றுவதும் இல்லை. ஆனால் நமக்கு இன்னும் அறிமுகம் ஆகாத ஆனால் நாம் அனைவருமே கண்ணை மூடிக்கொண்டு நம்பி வரும் கொடிய வேற்றுமை ஒன்று இருக்கிறது. அது தான் திணை வேற்றுமை (Species-ism). மனித உயர்திணைக் கோட்பாடு(HUMAN SUPREMACY) தான் உலகின் பல கொடிய துன்பங்களுக்கு அடிப்படை. மனித இனம் இல்லை என்பதாலேயே விலங்கினங்களை அடிமைப்படுத்தி கொலை செய்வது வரை குற்றவுணர்ச்சியே இல்லாமல் நாம் செய்வதுவே திணை வேற்றுமை.

ஜாதி, மத, நிற மற்றும் பாலின வேற்றுமை காரணமாக ஒரு மனிதனை துன்புறுத்துவது நியாயம் ஆகாது எனில் மனித இனம் இல்லாமல் விலங்கினத்தில்
இருக்கும் ஒரு உயிரை துன்புறுத்துவது எப்படி நியாயம் ஆகும்? பயம், வலி, துன்பம் என அனைத்தும் நம்மைப் போலவே தான் விலங்குகளுக்கும் என்று தெரிந்தும் தர்மமும் கருணையும் மனித இனத்திற்கு மட்டும் தான் என வகைப்படுத்துவது ஏன்?
பயம், வலி, துன்பம் என அனைத்தும் நம்மைப் போலவே தான் விலங்குகளுக்கும் என்று தெரிந்தும் தர்மமும் கருணையும் மனித இனத்திற்கு மட்டும் தான் என வகைப்படுத்துவது ஏன்? மாமிசத்திற்காக வளர்க்கப்படும் விலங்குகளும், முட்டைகளுக்காக வளர்க்கப்படும் கோழி போன்ற பறவைகளும் வாழ்நாள் முழுதும்(பிறந்த நொடி முதல்) சிறைபட்டே இருக்கின்றன, இறுதியாக கொலையும் செய்யப்படுகின்றன. மாமிசம் மற்றும் முட்டை போலவே பால் தயாரிப்பும் லட்சக்கணக்கான பசுக்கள் மற்றும் கன்றுகளின் துன்பத்திற்கும், மரணத்திற்கும் காரணமாயிருக்கிறது. போலவே தேன், பட்டு, முத்து
மற்றும் விலங்குகளைக் கொண்டு கேளிக்கை செய்யும் மிருகக்காட்சி சாலை மற்றும் சர்க்கஸ் போன்றவை கூட வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்நாள் முழுதும் சொல்லொணாத் துன்பம் அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


மனிதமான முறையில் மாமிசம் மற்றும் பால் தயாரிப்பா? 
அப்படி ஒன்று சாத்தியமே இல்லை.

பல நூற்றாண்டுகளாய் மனிதர்கள் அடிமைகளை இருப்பதை நாம் அனைவரும் எதிர்த்து வருகிறோம். ஏன் மனிதமான முறையில் அடிமைகளை உருவாக்கக் கூடாது? சாத்தியம் இல்லைதானே? ஏனென்றால், சுதந்திரத்தையும் வாழும் உரிமையையும் பறிப்பதே வன் கொடுமை தானே. இது மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் மனிதாபிமானம் பெரும் சிக்கலைக் கொடுக்கும். பேராசை எனும் பெரும் தேவையை தீர்க்க மனிதமான முறையில் எதையுமே மனிதனால் செய்ய முடியாது.
தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறதே? அவற்றிற்கு வலிக்காதா?
தாவரங்கள் பற்றிய உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் அசைவ உணவு தாவர உணவைக்காட்டிலும் 5 மடங்கு அதிக தாவரங்களை உட்கொள்ளச் செய்கிறது. இறைச்சியை உணவாக மாற்றவும் ருசி கூட்டவும் போக, இறைச்சி உருவாவதற்கே பெரும் அளவு தானியங்களும், தாவரங்களும் தேவைப்படுகின்றன. எனவே தான் மாமிசம் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு அதிக இயற்கை வளங்களை அழிக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றது. மேலும், நரம்பு மண்டலம் என எதுவும் இல்லாததால் தாவரங்களுக்கு வலி இருக்காது என்பது விஞ்ஞானிகள் கருத்து.
தாவர உணவு ஆரோக்கியமானதா?
நிச்சயமாக. தாவர உணவு உண்டு ஆரோக்கியமாக வாழும் சக மனிதர்களே அதற்கு உதாரணம்.
. நன்கு திட்டமிடப்பட்ட தாவர (வீகன்) உணவு முறை நிச்சயம் ஆரோக்கியமானதே.
பல வகையான புற்றுநோய்களுக்கும், இதய நோய்களுக்கும், இரத்த அழுத்தம், உடற்பருமன், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற பல உபாதைகளுக்கும் மாமிசம் மற்றும் பால் சார்ந்த உணவுகள் முக்கிய காரணமாய் இருக்கின்றன என்பது அறிவியல் முடிவு. மற்றொரு பக்கம், தாவர/வீகன் உணவு இத்தகைய நோய்களின் சாத்தியத்தைக் குறைப்பதோடு, நோய்களை குணப்படுத்தவும் செய்கிறது##.
*இறைச்சி உணவுகள் பல்வேறு ஹார்மோன் மற்றும் ஆன்டி-பயாடிக் பொருட்களுடன் சேர்ந்தே வருகின்றன. அவை விலங்குகள் வேகமாக வளரவும் கொழுக்கவும் கொடுக்கப்படுகின்றன. அதையே நீங்களும் உண்கிறீர்கள்.
*சரியான உணவை உண்பதால் உணவே மருந்தாகிறது. ஆரோக்கியமாக வாழ அதுவே வழி.
#வைட்டமின் பி12 சத்து பாக்டிரியாக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே அது செறிவூட்டப்பட்ட உணவுகள் மூலம் உட்கொள்ளப்பட வேண்டும்.
##ஆதாரம்- http://www.pcrm.org and http://www.sharan-india.orப்g
விழித்திடுவீர். இன்னும் எத்தனை காலம் பொய் விளம்பரங்களாலும், பணத்தால் ஜோடிக்கப்பட்ட கற்பனைகளையும் கண்டு ஏமாறப் போகிறோம்? நாங்கள் உணர்வால் ஒன்றுபட்டு விலங்குகளின் நலனுக்காகவும், மனிதனின் நல்வாழ்விற்காகவும் உங்களிடம் இந்த உண்மைகளைக் கொண்டு வந்துள்ளோம். பணத்திற்காக மட்டுமே விளம்பரங்கள் செய்து உங்களை ஏமாற்றும் இந்த உயிர்க்கொல்லி தொழிற்சாலைகள் உங்கள் நல்வாழ்வைப் பற்றி ஒரு நாளும் சிந்திக்காது.

www.ITVU.org